நல்ல படங்களை காய்கறிகளைப் போல் கூவிக்கூவி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்! -‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திண்டுக்கல் லியோனி பேச்சு

டிஸிஃப்மா (DESIFMA – Desales International Film & Media Academy) திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரித்து, எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளரும், தமிழக பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன், நடிகர் பாபு ஆண்டனி, எம்.எஸ்.எப்.எஸ்.’ நிறுவனத்தின் உலகத் தலைவர் பாதர் ஆபிரஹாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

நிகழ்வில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், “’அற்றைத்திங்கள் அந்நிலவில்’ என்ற இந்த அருமையான படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. இந்த படத்தை இயக்கியிருக்கிற லாரன் ஜெயகுமார் என்னுடைய மாணவர். அவர் இப்படி ஒரு இயக்குநராக உருவாகியிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்க வில்லை, பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். அதாவது 5 ஐயர்கள் சேர்ந்து பிரியாணி கடை வைக்க வேண்டும் என்று பிளான் போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோல தான் இவர்கள் இந்த படத்தை எடுத்ததும். புகைபிடிக்கும் காட்சி, மது அருந்துவது, ஆபாச காட்சிகள் என்று எந்த ஒரு தவறான காட்சிகளும் படத்தில் இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு, காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், இவர்கள் அதை மிக நாகரீகமாக கையாண்டிருக்கிறார்கள். ரத்தம், சண்டைக்காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துபோய் வெறுத்துபோன ரசிகர்களுக்கு இந்த ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை.

இப்படி ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாக்களின் கையில் தான் இருக்கிறது. காரணம், நல்ல பொருட்களை நாம் தான் கூவி கூவி விற்க வேண்டும். கீரை, வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றை தெருவில் கூவி கூவி விற்பார்கள், அவை அனைத்தும் உடலுக்கு நல்லது. அதை வாங்க ஒரு மணி நேரம் பேரம் பேசுவோம். ஆனால், விஸ்கி, பிராந்தி என்று யாராவது வண்டியில் வைத்து விற்கிறார்களா? ஆனால், அந்த கடை எங்கிருந்தாலும் தேடி சென்று வாங்குவார்கள். 10 மணிக்கு மூடி விடுவார்கள், என்று தலை தெறிக்க ஓடுவார்கள். அதனால், நல்ல பொருட்களை நாம் தான் மக்களிடம் கூவி கூவி விற்க வேண்டும். அதுபோன்ற ஒரு நல்ல திரைப்படமான ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ படத்தை நாம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த தலைப்பே அழகான இலக்கிய தலைப்பாக இருக்கிறது. பாரியின் மகள்கள் தனது தந்தையை நினைத்து பாடும் பாடல் தான் அற்றைத்திங்கள் அந்நிலவில், அதை தலைப்பாக வைத்ததே இப்படத்தின் சிறப்பு. இதே வரிகளை, மக்களுக்கு புரியும்படி கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலாக கொடுத்திருக்கிறார். பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறும். அதுபோல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், “இப்படி ஒரு விழா இங்கு நடப்பதற்கு காரணமாக இருக்கும் இறைவனுக்கு நன்றி. இந்த அருமையான விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்திய என் ஆசிரியர் திண்டுக்கல் லியோனி சாருக்கு நன்றி. அவரிடம் தான் நான் அறிவியல் படித்தேன். அவர் அறிவியல் ஆசிரியர் என்பது யாருக்கும் தெரியாது. அந்த ரகசியத்தை இப்போது சொல்லிவிட்டேன். அதேபோல், எம்.எஸ்.எப்.எஸ். உலகத் தலைவர் ஜெனரல் பாதர் ஆபிரஹாம், இந்த நிகழ்ச்சிக்காக ரோமில் இருந்து வந்திருக்கிறார்.

திரைப்பட பயிற்சி மையம் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது என்பது இது தான் முதல் முறை. அதை  டிஸிஃப்மா செய்திருப்பது பெருமையாக இருக்கிறது. திரைப்பட பயிற்சி மையத்தை பொருத்தவரை மாணவர்கள் படிப்பார்கள், குறும்படங்கள் எடுப்பார்கள், அதன் பிறகு அவர்களுக்கு டிப்ளோமோ சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். ஆனால், ஒர் முழுமையான திரைப்படம் தயாரிப்பது என்பதை யாரும் செய்யவில்லை. இந்த யோசனையை நான் லயோலா கல்லூரியில் இருக்கும் போதே, லயோலா போன்ற பெரிய கல்வி நிறுவனத்தால் வெற்றிகரமான திரைப்படங்களை கொடுக்க முடியும்’ என்று சொன்னேன். ஆனால்,  பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி என்பதால் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. அப்போது, எம்.எஸ்.எப்.எஸ். இந்திய தலைவராக பாதர் ஸ்டீபன் இருந்தார். அவர் தான் நிச்சயம் இதை நாம் செய்வோம், என்று நம்பிக்கை அளித்தார். அவருடைய நம்பிக்கை  தான் இன்று வெற்றிகரமான படமாக உருவாகியுள்ளது.

இப்படி ஒரு யோசனையை செயல்படுத்துவதற்கு முன்பு பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி கூட இருக்க க்கூடாது, என்பதில் தெளிவாக இருந்தோம். எந்த ஒரு சிறு காரணத்தினாலோ சபையின்  பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது,  என்று சொன்னார்கள். நான் லயோலா கல்லூரியில் மீடியா படிப்பில் 18 வருடங்கள் பேராசியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது மாணவர்களிடம்  நான் சொல்வது ஒன்று மட்டும் தான், தேவையில்லாத  ஆபாசக் காட்சிகளை வைத்து படம்  எடுக்காதீர்கள். நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வைத்து படம் எடுங்கள் என்று சொல்வேன். அதனால், சபையினருக்கு நான் நிச்சயம் தரமான படத்தை மட்டுமே கொடுப்பேன், என்று உறுதியளித்தேன். அதன் பிறகு தான் படம் எடுக்க சம்மதித்தார்கள்.

அந்த வகையில் தரமான படமாக மட்டுமின்றி, எந்தவித தேவையில்லாத காட்சிகளோ அல்லது திணிக்கப்பட்ட காட்சிகளோ இல்லாத படமாக இயக்கியிருக்கிறேன். நிச்சயம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here