நடிகர் சிபி சத்யராஜின் 20வது படம் உருவாகிறது. இந்த படத்தை பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார்.
இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாக பரபரப்பான ஆக்சன் அதிரடி திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவது படத்தின் மீது பெரும் ஈர்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
படம் குறித்து இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் கூறியதாவது..,
நான் கடந்த 5 வருடங்களாக தென்னிந்திய இசைத்துறையில் பணியாற்றி வருகிறேன். வித்யாசாகர் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், ஜி.வி.பிரகாஷ், தமன் சார் மற்றும் பலருக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இசையமைப்பாளராக இது எனது முதல் படம் என்பதில், நான் மிக உற்சாகமாக இருக்கிறேன். இப்படத்தின் திரைக்கதையை கேட்டபோது, பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன், அது இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். நான் முன்பே இந்த வகைத் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன், ஆனால் மற்ற இசையமைப்பாளர்களின் கீழ் தான் நான் பணியாற்றியிருக்கிறேன், இப்போது தான் முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன, விரைவில் அதற்கான ரெக்கார்டிங் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.
இந்தப் படத்திற்கு பிரவீன் குமார் (ஜிவி, கிளாப் மற்றும் ஹாஸ்டல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அறிமுக இயக்குநரான பாண்டியன் ஆதிமூலம், எஃப்எம், டிவி ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் என கடந்த பத்தாண்டுகளாக ஊடக உலகில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, விரைவில் தொடங்கப்படும் ஓடிடி தொடர் ஒன்றுக்கு வசனங்களையும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.