இசைமேதை டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவின் 93-வது நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு, டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முரளி நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கான விழாவை பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வரும் ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகிறது.
நிகழ்வானது கலைமாமணி டாக்டர் கே கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி பின்னி கிருஷ்ணகுமார் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து பல்வேறு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன.
நிகழ்வில் இசையுலப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள். கோயமுத்தூர் பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பிகே கிருஷ்ணராஜ் வானவராயர், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு முரளி நாத லஹரி விருதினை வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறார்.


