‘சின்னஞ்சிறு கிளியே‘ சினிமா விமர்சனம்
நம்மூர் இயற்கை மூலிகை மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல தமிழ் சினிமாவில் மற்றுமொரு படம். காலச்சூழலில் அவசியமான படமும்கூட!
இயற்கை மருத்துவத்தின் மீது ஈடுபாடு கொண்டவர் இயற்கை உணவகம் நடத்திவருகிற செந்தில்நாதன். ஆங்கில மருத்துவத்தின் அலட்சியத்தால் நிறைமாத கர்ப்பிணியான காதல் மனைவியை பறிகொடுக்கிறார். மழலை மொழிபேசும் தனது மகளை சிலர் கடத்திவிட அதற்கான காரணம் என்ன, கடத்தியவர்கள் என விரிகிறது திரைக்கதையின் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்கள்… இயக்கம்: சபரிநாதன் முத்துபாண்டியன்
செந்தில்நாதன் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். மனைவியை இழந்தபின் ஆழுது வெடித்து, தனது பாட்டியிடம் கோபாவேசம் காட்டுவது ஈர்க்கிறது.
நீளவட்ட முகம் மேல் நோக்கிய பார்வை என கவர்கிறார் சாண்ட்ரா நாயர். அவருக்கும் செந்தில்நாதனுக்குமான ரொமான்ஸ் எபிசோடுகள் அழகு.
இன்னொரு நாயகியாக வருகிற அர்ச்சனா சிங்கின் அமைதியான நடிப்பும் இளமையும் திரைக்கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.
குழந்தை நட்சத்திரம் பதிவத்தினியின் துடிப்பான நடிப்பும் நாயகனின் தாத்தா – பாட்டியாக வருகிற கவிஞர் விக்கிரமாதித்யன், குலப்புலி லீலாவின் நடிப்புப் பங்களிப்பும் கச்சிதம்.
பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவு நேர்த்தி. மனதுக்கு இதமான பாடல்களைத் தந்துள்ள மஸ்தான் காதர், பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.
ஆங்கில மருத்துவத்தின் பின்னணியில் இருக்கிற மக்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் இயக்குநர் சபரிநாதன் முத்துபாண்டியனின் சமூக அக்கறை வெளிப்படுகிறது. இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு ஏராளமான விருதுகளைக் குவித்திருப்பது கதைக்கருவுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்!