பிரியங்கா திரிவேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
பிரபல நடிகரும், இயக்குநருமான உபேந்திராவை திருமணம் செய்தபின், பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தார். அவர் இப்போது நடித்து வரும் படம் ‘டிடெக்டிவ் தீக்ஷனா.’
இது பிரியங்காவின் 50-வது படம்! த்ரிவிக்ரம் ரகு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த படம் குறித்தும், தனது ஆரம்பகால படங்கள், அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார் பிரியங்கா…
நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். 16 வயதில் ‘மிஸ் கொல்கத்தா’ ஆனேன். பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். 1999 – 2003க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன்.
அந்த நேரத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றினேன். விஜயகாந்த், விக்ரம், பிரபுதேவா, உபேந்திரா ஆகியோருடன் படங்களில் நடித்தேன்.
எனது முதல் படம் பெங்காலி படம், தேசிய விருது பெற்ற இயக்குநர் பாசு சாட்டர்ஜி இயக்கிய ‘ஹதத் பிரிஷ்டி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது. எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை. அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது அவ்வளவு சுலபமல்ல, யாருடன் நடிப்பது? என்ன மாதிரியான கதைகளை தெர்ந்தெடுப்பது? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன. ஆனாலும், நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன். எனக்கென்று ஒரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டேன்.
குழந்தைகள் பிறந்த பிறகு எனக்கு 8 பெங்காலி படங்கள் கிடைத்தது. ஆனால், குழந்தைகளுடன் என்னால் கொல்கத்தா செல்ல முடியவில்லை. அதனால், கன்னட படங்களில் மட்டுமே நடிக்க விரும்பினேன். பாலிவுட் படமான ‘ஐத்ராஸ்’ படத்தின் ரீமேக்கான ‘ஸ்ரீமதி’ படத்தில் உபேந்திராவுடன் நடித்தேன். அப்புறம் ரவிச்சந்திரன் சாருடன் ‘கிரேஸி ஸ்டார்’ படத்தில் நடித்தேன்.
இப்போது பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது. அதனால் எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், திகில் படங்களில் தொடர்ந்து நடிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிறகு ‘இரண்டாம் பாதி’, ‘தேவகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
இப்போது டிடெக்டிவ் தீக்ஷனா எனது 50-வது படம்.
ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ரசிகர்களிடமிருந்து பெரும் அன்பு கிடைக்கும்போது அவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
சமூக வலைதளங்களில் திருமணமான பல பெண்கள் என்னை சக்திவாய்ந்த வேடங்களில் பார்க்கும்போது சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் சொல்கிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
‘டிடெக்டிவ் தீக்ஷனா’ படத்தின் இயக்குநர் ரகு கடின உழைப்பாளி. நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ ஆக்ஷன் படம் செய்ய ஃபிட்டாக இருக்க வேண்டும். கதாபாத்திரத்தின் உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்துப் பார்த்து செய்திருக்கிறோம். இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.
இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்ஷனா’வில் பார்க்கலாம்.
பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்த படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்.
இந்த படம் ஒரு மிடுக்கான ஆக்ஷன் எண்டர்டெய்னர். பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வணிகரீதியாகவும் இந்த படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறோம்.
‘பாகுபலி’க்குப் பிறகு ‘கேஜிஎஃப்’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கந்தாரா’ போன்ற திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படத் துறைக்கு இடையே இருந்த எல்லைகளை உடைத்துள்ளன. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியிடுகிறோம்.
இந்த படத்துக்கு பிறகு ‘கர்த்தா கர்மா கிரியா’, ‘விஸ்வரூபினி ஹல்லிகெம்மா’, ”கைமாரா மற்றும் பெங்காலி படமான ‘மாஸ்டர் ஆங்ஷுமான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இவை தவிர ‘தி வைரஸ்’, ‘கமரோட்டு செக்போஸ்ட் 2’, ‘உக்ரா அவதாரா’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன” என்றார்.

