Home பொது வீடியோ காலில் பேசி ஊக்குவிப்பு… சொந்த ரெஸ்டாரண்டில் உணவு உபசரிப்பு… ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவை...

வீடியோ காலில் பேசி ஊக்குவிப்பு… சொந்த ரெஸ்டாரண்டில் உணவு உபசரிப்பு… ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவை குஷியாக்கிய நடிகர் சூரி!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.
உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.
விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்