பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளன.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என தனது முதல் இரண்டு படங்களின் மூலம் வெற்றி கண்ட நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிற ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ இந்த படத்தை தயாரித்துள்ளது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.