தெலுங்குப் படவுலகின் முன்னணி கதாநாயகன் ராணா, தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த மலையாள தேசத்து நட்சத்திரம் துல்கர் சல்மான் இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ‘ஸ்பிரிட் மீடியா’, துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். படத்திற்கு ‘காந்தா’ என தலைப்பிடப்பட்டு துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியாகிருக்கிறது. துல்கர் சல்மான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
படம் தயாரிப்பது குறித்து ராணா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம். காந்தா அதுபோன்ற ஒரு கதை. இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மானுடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். துல்கர் சல்மானை காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.படத்தில் நடிக்கவிருப்பவர்கள், தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.