தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாக, நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘குற்றம் புதிது.’ இந்த படத்தில் கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்க மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், “கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், “சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி, “நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை” என்றார்.
தருண் விஜயின் தந்தையும் இந்த படத்தின் இணைத் தயாரிப்பாளரருமான எஸ். கார்த்திகேயன், நடிகை பிரியதர்ஷினி, ‘கெவி’ பட இயக்குநர் தமிழ் தயாளன், தயாரிப்பாளர் கணேஷ், நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் பேரரசு, படத்தை வெளியிடும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.



