கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற நம் தமிழ் மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அமைந்துள்ள அந்த அருங்காட்சியகத்தை மக்கள் சமீப காலமாக கண்டு களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் பேரரசு கீழடிக்கு சென்றுள்ளார். அருங்காட்சியக நுழைவு வாயிலின் முன்பு வெள்ளிக்கிழமை விடுமுறை என்று மாற்றப்பட்டிருந்தது.
அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று மக்களுக்கு தெரியாது. முதல் வார வெள்ளிக்கிழமை வரை மக்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் முதல் முறையாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை என்று அறிவித்திருக்க ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சென்னை, திண்டுக்கல் என்று பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து குவிந்திருந்தனர். அது மட்டுமில்லாமல் பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும் வந்திருக்கின்றனர்.
மக்கள் எவ்வளவோ கேட்டும் அங்குள்ள அதிகாரிகள் மக்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பேரரசு அங்குள்ளவர்களிடம் பேசிப் பார்த்திருக்கிறார் அப்போதும் அவர்கள் பிடிவாதமாக யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
பிறகு பேரரசு, மக்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று சொல்லி மக்கள் மத்தியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்!
பிரச்சனை அறிந்து மீடியாக்களும் அங்கு வந்து விட்டனர். மீடியாக்களிடம் பேசிய பேரரசு நிலைமையை மீடியாக்களிடம் தெரிவித்து ஞாயிறு விடுமுறை என்பது மட்டும் மக்களுக்கு அறிந்த ஒன்றாக இருக்கும். நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று யாரும் அறிந்திட மாட்டார்கள். மேலும் அன்றைய பேப்பரில் ஏப்ரல் 14 க்கு பின் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று வந்திருந்தது. இங்கு வரும் மக்கள் பேப்பரை பார்த்து செய்திகளை படித்துக் கொண்டு வருவதில்லை. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பது துபாய், அபுதாபி, சவுதி போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டும் இருப்பதாகும். நம் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை என்று காலங்காலமாக நடந்து வருகிறது.
இந்த கீழடிக்கு வரும் மக்கள் தமிழ் உணர்வோடும், நம் மூதாதையர்கள் பயன்படுத்தி பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடும் வருகிறார்கள் மேலும் மாணவ மாணவிகள் தான் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்கள் தான் வர முடியும். மக்களும் விடுமுறை நாட்களில் தான் வந்து பார்க்க முடியும் இதில் ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று இவர்கள் விடுமுறை விட்டால் என்ன ஆவது?
டாஸ்மாக்கில் கூட இங்கு விடுமுறை நாள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் இந்த கீழடி ஆழ்வாராய்ச்சி காட்சிக்கு ஏன் விடுமுறை என்று பல கேள்விகளை வைத்த பேரரசு அதே சமயம் எம்பி வெங்கடேசனை தொடர்பு கொண்டு சூழ்நிலையை விளக்க உடனே அவர் அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களை உள்ளே அனுமதிக்க ஆவன செய்தார். பேரரசு, எம்பி வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.மட்டுமல்லாது கீழடியில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் பேரரசு.