சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி, கடந்த ஜூலை 14-ம் தேதி வெளியான படம் ‘மாவீரன்.’
படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு காரணமாக இருக்கிற ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா படத்தின் வெற்றி விழாவாக சென்னையில் நடந்தது.
நிகழ்வில் சிவகார்த்திகேயன் , “படத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். காரணம், என்னுடைய நடிப்புக்கு பத்திரிகைகளிடமிருந்து நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது. நான் மிமிக்ரி செய்து டிவியில் வந்தவன். காமெடி மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும். எனக்கு அப்படிதான் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்.
என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு பர்ஃபார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான். மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும்.
முதல் பாதி சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி எமோஷனலாகவும் ஆக்ஷன் காட்சிகளுடனும் சிறப்பாக வந்திருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள். சிறந்த படத்துக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதை இதற்குக் கொடுத்திருந்தோம். அதை ஏற்றுக் கொண்டு வெற்றிக் கொடுத்த மக்களுக்கு நன்றி. அரசியல் கதையை அழகாக அஸ்வின் எடுத்துச் சென்றுள்ளார். படம் வெளியான முதல் நாள் மாலை நான் காஷ்மீர் சென்றுவிட்டேன். சரிதா மேம்தான் தியேட்டர் ரெஸ்பான்ஸ் குறித்து எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதிதிக்கு படத்தில் குறைந்த நேரம்தான் என்றாலும் அப்படி எல்லாம் யோசிக்காமல் புரோமோஷன் வரை சின்சியராக செய்து கொடுத்தார். வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். முதலில் இந்தப் படத்தில் வாய்ஸ் கொடுக்க விஜய்சேதுபதி சார்தான் இயக்குநர் சாய்ஸாக இருந்தது. எனக்கு விஜய்சேதுபதி சாருடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு. சீக்கிரம் அதுவும் நடக்கும். மிஷ்கின் சார், சுனில் சார், முதல் ட்வீட் போட்ட உதயநிதி சார், ரவிதேஜா சார், யோகிபாபு சாருக்கு நன்றி” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் மடோன் அஸ்வின், “இந்த படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறந்த உழைப்பைக் கொடுத்து ‘மாவீரன்’ உலகத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
நிகழ்வில், படத்தின் நாயகி அதீதி ஷங்கர், நடிகை சரிதா, தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இசையமைப்பாளர் பரத் ஷங்கர், நடிகர்கள் அருவி மதன், திலீபன், பழனிவேல், கோ-ரைட்டர் சந்துரு, பப்ளிசிட்டி டிசைனர் சிவக்குமார், கலை இயக்குநர் அருண், எடிட்டர் ஃபிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் விது உள்ளிட்டோரும் பேசினார்கள்.