அந்த இளம் ஜோடிக்கு திருமணமாகி, ‘மொத ராத்திரி’ அறைக்குள் போய் அமர்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் பெண் மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சிக்கிறாள். அவருக்கு விவரம் தெரிந்து விடுகிறது. ‘ஏன் இப்படி?’ என விசாரிக்கிறார். அவள் ஒருவனை காதலிக்க, அதை எதிர்த்து கட்டாயமாக நடத்தப்பட்ட கல்யாணம் இது என்பது தெரிகிறது.
‘இதெல்லாம் காலம் காலமாக நிஜத்திலும் சினிமாக்களிலும் நடக்கிற கதைதானே? என சலிப்படையத் தேவையில்லை. மேட்டரே இனிமேல்தான்…
ஆமாம், இந்த கதையில், அந்த மாப்பிள்ளைக்கு அன்று காலைதான் தனக்கு கல்யாணம் என்பதே தெரியும். யார் பெண், என்ன விவரம் என ஒரு வார்த்தைகூட அவருக்கு சொல்லாமல் அவரது வீட்டார் ஏற்பாடு செய்த கல்யாணம். ஆக, அவருக்கும் அது கட்டாய கல்யாணம். அதற்கான காரணம் சிம்பிளாக இருக்கிறது. இருக்கட்டும்…
மாப்பிள்ளை, ‘சரி நடந்தது நடந்து விட்டது. உன் காதலனுடன் நானே சேர்த்து வைக்கிறேன்’ என அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.
நடந்த விஷயங்கள் இரு வீட்டாருக்கும் தெரிந்து, சண்டை சச்சரவாகி, அடிதடியாகி சூழ்நிலை மோசமாகிறது.
அதையெல்லாம் கடந்து அந்த பெண் காதலனுடன் சேர்ந்தாளா இல்லையா என்பது கதையின் மீதி…
காதுகுத்துக்கு என கூப்பிட்டு மணமகனாக்கியதில் அதிர்ச்சி, தன் கையால் தாலி கட்டிக் கொண்டவள் முதலிரவில் தப்பியோட தயாரானதைக் கண்டு அடுத்த அதிர்ச்சி, அவளை அவளது காதலனுடன் சேர்த்து வைக்கப் போனதில் அந்த காதலனின் நிலைமை தருகிற அதிர்ச்சி… ஒரு ஆள் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும்? அப்படியெல்லாம் அதிர்ச்சியடைகிற பாத்திரத்தை ஏற்றுள்ள ரிஷிகாந்தின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. நடிப்பு கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது.

