சிறிய படங்களை வெளியிடும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? -‘நூடுல்ஸ்’ மூலம் பாடம் கற்றுக் கொண்ட இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி

‘அருவி’ படம் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி,‘நுடுல்ஸ்’ படம் மூலம் சிறந்த இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார்.

எப்போதாவது அத்திபூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தருவதாக அமைந்து விடும். அப்படி ஒரு படமாக இருந்தது அவர் முதன்முறையாக இயக்கி சமீபத்தில் வெளியான ‘நூடுல்ஸ்.’

இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக மாற்றியதே இயக்குநர் மதனுக்கு கிடைத்த முதல் வெற்றி!

ஹரீஷ் உத்தமன் மட்டுமல்ல, நாயகி ஷீலா ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மதன் தட்சிணாமூர்த்தி, வக்கீலாக நடித்திருந்த வசந்த் மாரிமுத்து, மேல் வீட்டுக்காரர் சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசு குழந்தை ஆழியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருமே அந்த கதாபாத்திரங்களாக மாறி நடிப்பில் நூறு சதவீத பங்களிப்பை கொடுத்திருந்தனர். சொல்லப்போனால் படம் பார்க்கும் ஒவ்வொருவருமே அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்கு அருகிலிருந்து பார்த்து அவர்களின் கஷ்டத்தை நாமே படுவது போல உணர வைக்கும் அளவிற்கு வெகு நேர்த்தியாக இப்படத்தை இயக்கியிருந்தார் மதன் தட்சிணாமூர்த்தி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தொகுப்பாளர் சரத்குமார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரின் பங்கும் இன்றியமையாததாக அமைந்து நல்ல சினிமா ரசிகர்களுக்கு நூடுல்ஸ் விருந்தானது!

நூடுல்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி பேசும்போது, “’நூடுல்ஸ்’ மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பை கொடுத்தது. ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது.

நூடுல்ஸ் படத்தை பாராட்டிய சில தயாரிப்பாளர்கள் நூடுல்ஸ் குழுவினரை இதே போன்ற நல்ல படங்கள் செய்யவேண்டும் என வரவேற்று இருப்பது மேலும் மகிழ்ச்சியை தருகிறது.

திரைத்துறையை சேர்ந்த பலரின் பாராட்டுகள் அடுத்த படத்திற்கான பொறுப்பையும் கவனத்தையும் அதிகரித்துள்ளது.

இச்சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ROLLING SOUND PICTURES பிரக்னா அருண் பிரகாஷ், LIME TREE CINEMAS cinemas சுருளிராஜ் மற்றும் V HOUSE PRODUCTIONS தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார் பெருமிதத்தோடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here