தேவயானி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜித் கதாநாயகனாகவும் நடித்துள்ள நிழற்குடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சிவா ஆறுமுகம், “இந்த படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன்” என்றார்.
நடிகை தேவயானி பேசியபோது “என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை.
30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்றார்.
‘நாம் தமிழர்’ சீமான் பேசியபோது, ”ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயர்த்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. நிழற்குடை படத்திலிருந்து திரையரங்கின் தொடக்க காட்சிக்கு மக்களை அழைத்து வருவதற்கு அவரே போதும். இந்த படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.
நிகழ்வில் நாயகன் விஜித், நாயகி கண்மணி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ராஜ்கபூர், நடிகர் ரவிமரியா, நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் நகுல், தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் ராஜகுமாரன், நடிகை நமீதா, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோரும் படம் பற்றியும், படக்குழுவினரை வாழ்த்தியும் பேசினார்கள்.