ராதாரவி, ரவிமரியா, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, நிழல்கள் ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை ராம்தேவ் இயக்குகிறார்.
ராம்தேவ் ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர்.
படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ”தற்போது தமிழக அரசியல் களம் அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கருத்துக்கணிப்புகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ராதாரவி மற்றும் ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி அரசியல் காமெடி தர்பார் நடத்துகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடுதல் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது” என்றார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.
கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு துர்காஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கலை இயக்கத்தை குணசேகரன் கவனிக்கிறார். அரசியலும் , நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குனர் ராம்தேவ் தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

