கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, கே ஆர் விஜயா, ஆர் என் ஆர் மனோகர், பாவா லஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிக்க, ராம்நாத் டி இயக்கியிருக்கும் படம் ‘ராயர் பரம்பரை.’
வரும் ஜூலை 7-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் 30.6.2023 அன்று மாலை படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் ராம்நாத் பேசியபோது, ‘‘நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது. கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர். அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது. இந்த படத்தை உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது. அது தான் இந்தப் படம் உருவாக காரணம்” என்றார்.
நடிகர் கிருஷ்ணா பேசியபோது, ‘‘இது ஃபுல் ஹீயூமர் படம். நான் முன்பு இந்த மாதிரி படத்தில் நடித்ததில்லை. எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இந்த படத்தின் கதாநாயகி தான் இருக்கிறார். அந்தளவுக்கு ஃபேமஸான மாடல். இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியபோது, ‘‘இது சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம். தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம். யாரையும் தாழ்த்திப் பேசாத நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியபோது, ‘‘இது ஒரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால், இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். வெற்றி பெற அனைத்து தகுதியும் இந்த படத்தில் உள்ளது” என்றார்.


