சென்னை தி.நகர் ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் 14-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சென்னை, தமிழ்நாடு அரசின் மாநில புலனாய்வுத் துறை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி IPS, சென்னை அரசு மேலாண்மைத்துறையின் செயலர் மைதிலி இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால் விழாவினைத் தொடங்கி வைக்க, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி வரவேற்புரை நல்கினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தங்களின் சிறப்புரையில் கல்வி என்பது பெண்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றும் கல்வி மட்டும்தான் அனைத்து தகுதியினையும் ஏற்படுத்தித் தரும் என்றும் பெண்கல்வி என்பது அவர்களுக்கும் அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் பேசினர்.
தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
இதில் 1281 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில், பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கமும் அடுத்த 30 இடங்களில் உள்ளவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் ‘ஸ்ரேயஸ்’ என்கிற கல்லூரிகளுக்கு இடையிலான கலை விழா நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் தம் உரையில், எந்த வேலையைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்தால் அது சிறப்பாக அமையும் என்றார்.
நிறைவு விழாவில் நடன இயக்குநர் சந்தோஷ் குமார் (சாண்டி மாஸ்டர்) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட நடிகர் கிஷன்தாஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நிறைவு விழாவினைக் காணொளித் தொகுப்பாளர் (VJ) கதிரவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மட்டுமல்லாது பலகுரல் கலைஞர் விக்னேஷ் ஆண்டனி, நகைச்சுவை நடிகர் அமுதவாணன், காணொளித் தொகுப்பாளர், நடிகர் விஷால் மற்றும் ராகுல் வர்மா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந் தேவா, நடிகர் சரவண விக்ரம், பாடகர் கே.ஜே ஐயனார், நடிகர் சஞ்சய் மோகன் என கலைநிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்!

