‘கரகாட்டக்காரன்’ படத்தின் 2-ம் பாகம் ‘டப்பாங்குத்து’ என்ற பெயரில் எடுக்கப்படுகிறது; மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்ற செய்தி சமுகவலைதளங்களில் பரவி வருகிறது.
இது பற்றி படத்தின் இயக்குநர் ஆர்.முத்து வீராவிடம் கேட்டபோது, ‘‘மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கோவில் திருவிழாக்களில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்துவார்கள். அதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதுதான் கரகாட்டக்காரன் திரைப்படம்.
அதேபோல் மற்றொரு தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து உருவாகி வருவதே எங்களின் டப்பாங்குத்து. கரகாட்டத்திற்கும், தெருக்கூத்து ஆட்டத்திற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதேபோல் கரகாட்டக்காரன் பாகம் 2-க்கும், எங்கள் படத்துக்கும் சம்பந்தமில்லை” என்றவர், ‘‘கரகாட்டம்போல் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழா நாட்களில் தெருக்கூத்து ஆட்டம் போடுவார்கள். அதில் ராஜாராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலைசிந்து என விதவிதமாக ஆடிப்பாடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அந்த கலையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதே இந்த படம். தெருக்கூத்து ஆட்டம் தெருவில் நடக்கும்போது சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் சிரித்து மகிழ்ந்து ரசிப்பார்கள். அதை அப்படியே திரையில் ரசிக்கும் விதத்தில் டப்பாங்குத்து தயாராகி வருகிறது” என்றார்.
இந்த படத்தில் தெற்கத்திப் பொண்ணு’ புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
எஸ்.டி. குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 15 வகையான நாட்டுப்புறப் பாடல்களுக்கு சரவணன் இசையமைத்துள்ளார்.
எஸ்.ஜெகநாதன் ‘மருதம் நாட்டுப்புற பாடல்’ என்ற நிறுவனத்திற்காக இந்த படத்தை தயாரிக்கிறார்.
தெருக்கூத்தில் ஆடும் அதே கலையை நடன இயக்குநர் தீனா நேர்த்தியாக தந்துள்ளார்.
படத்திற்கு ராஜா கே.பக்தவசலம் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு பணிகளை செல்வரகு கவனிக்கிறார்.
‘ராம்ஜி கேசட்’ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் ‘கர்ணன்’ படத்தில் கிடாக்குழி மாரியம்மாள் பாடி அனைவரையும் கவர்ந்தது. அதேபோல், ராம்ஜி கேசட் நிறுவனத்தின் உரிமை பெற்று 10 பாடல்கள் ‘டப்பாங்குத்து’ படத்தில் இடம்பெறுவது படத்திற்கு சிறப்பு சேர்க்கும் அம்சமாக இருக்கிறது!


