Home சினிமா இந்த படத்துக்கு திருவள்ளுவர் என பெயர் வைக்காமல் திருக்குறள் என பெயர் வைத்ததன் காரணம் என்னவாக...

இந்த படத்துக்கு திருவள்ளுவர் என பெயர் வைக்காமல் திருக்குறள் என பெயர் வைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்? -திருக்குறள் பட விழாவில் வி சி க தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு நோக்கில் பேச்சு

ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் திருக்குறளை வைத்து மிகப் பிரமாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பாலகிருஷ்ணன், ”குரோசோவா ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி.

இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைத்தார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரளோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும்.

படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார்.

இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐடி விஸ்வநாதன் ஐயா உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் பேசியபோது, ”இயக்குநர் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர்.

இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.

திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது.

திருக்குறள் மதம் சார்ந்த நூலாக இருந்திருந்தால், அந்த மதத்திற்குரியவர்கள் மட்டும்தான் போற்றி இருப்பார்கள், போற்றிக் கொண்டிருப்பார்கள், பைபிள் கிறிஸ்தவர்களுக்குரியது, அதனால் ஆனால் உலகத்தில் எந்தெந்த மொழியை பேசுகிறவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த மொழியிலே பைபிளை மொழியாக்கம் செய்கிறார்கள்.

குர்ஆன் இஸ்லாமியர்களுக்குரியது, இஸ்லாமியர்கள் உலகம் தழுவிய அளவில் வாழ்கிறார்கள், அவர்கள் என்னென்ன மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து கொள்கிறார்கள். அதனால் அனைத்து பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஹீபுரு அல்லாத பிறமொழி பேசக்கூடிய அரபு அல்லாத பிறமொழி பேசக்கூடிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதவழி சார்ந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் அந்த குர்ஆனை அந்த வேத நூலை மொழியாக்கம் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயம் ஏற்படுகிறது.

குரானுக்கு, பைபிளுக்கு ஆனால் அப்படி எந்த மதத்தையும் சாராமல், ஆனால் எல்லா மொழிகளை சார்ந்தவர்களும், ஒரு மொழியை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், ஒரு நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரிய நூல் திருக்குறள் மட்டும்தான். இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது.

இதை உயர்த்தி பிடிக்க வேண்டிய ஒரு பார்வை நமக்கு வேண்டும். அந்த பார்வை நம்முடைய இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு திருக்குறள் என்று பெயரிட்டிருக்கிறார். இதுவே அவருடைய சிறப்பு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்