முரட்டுக் காளை தூக்கி வீசியதில் காயம்; வலியை பொருட்படுத்தாமல் நடித்த முருகா அஷோக்… ‘வட மஞ்சுவிரட்டு’ படப்பிடிப்பில் பரபரப்பு!

கிராமத்து மண், மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு.’

படத்தின் நாயகன் ‘முருகா’ அஷோக். படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி சி பி ஏ.

படத்தில் மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன.  அந்த வகையில் திண்டுக்கல் அஞ்சுகுளிப்பட்டி என்கிற கிராமப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது காளையுடன் கதாநாயகன் ‘முருகா’ அஷோக் நடிக்க வேண்டிய காட்சி.

அப்போது படத்தில் நடித்துக் கொண்டிருந்த முரட்டுக்காளை எதிர்பாராத வகையில் தன் பெரிய கொம்புகளால் ‘முருகா’ அஷோக்கை தூக்கி வீசியது.

நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயிற்றுலிருந்து மார்பு வரை ஒரு கோடு காயமாக ஏற்பட்டது. படப்பிடிப்பிலிருந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூடியது மே ஒரே பரபரப்பாகிவிட்டது.

ஆனாலும் அஷோக் தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சிகிச்சைக்குப் பின் அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பை தற்காலிகமாக சற்று தள்ளி வைக்கலாம் என்று சொன்னபோது அஷோக் “தயாரிப்பாளர் பணமும், ஆர்ட் டைரக்டர் டீம் போடப்பட்ட செட், காளை, மாடு புடி வீரர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் முழு குழுவின் உழைப்பும் வீண் போக கூடாது” என்று சொன்னபடி நடித்திருக்கிறார்.

அந்த விபத்து பற்றி பேசிய நாயகன் அஷோக் “அந்த காளையின் பெயர் பட்டாணி. அது என்னுடன் நல்ல பழக்கத்தில் தான் இருந்தது. அதைத் தொட்டு தடவி நெற்றியிலெல்லாம் முத்தமிட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு அன்று என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னை தாக்கி விட்டது.

மனிதர்களுக்குக் கோபம் வந்தால் வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால் இது போல விலங்குகள் என்ன செய்யும்? விலங்குகள் தங்கள் உணர்வுகளை, மகிழ்ச்சியை கோபத்தைச் செயலால் தான் வெளிப்படுத்த முடியும். அன்று என் மீது அப்படி வெளிப்படுத்தி விட்டது. என்ன கோபமோ தெரியவில்லை, அதை என் மீது வெளிப்படுத்தி விட்டது. ஆனாலும் இதுல அழகு என்ன தெரியுமா?! பட்டாணி அதற்குப்பின் சோகத்தில் கண்ணீர் கூட விட்டு நின்றான் பாவம். ஏதோ நம் வீட்டில் குழந்தை அடம் பிடித்த பின் அந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற போலவே இருந்தது.

மருத்துவரிடம் சென்ற போது குத்து சற்று ஓரங்குலம் நகர்ந்து இருந்தால் மார்பில் தாக்கியது நுரையீரலைக் கிழித்திருக்கும் என்றார். காயம் போக போக சற்று விரிந்து விட்டது. எதிர்பாராமல் விழுந்த அடியின் அழுத்தத்தினால் இன்னும் மார்பின் வலி முழுமையாக போகவில்லை.

ஆனால் அன்றே அப்போதே நான் இறைவனுக்கு நன்றி கூறினேன். சிவனின் வாகனம் தான் ரிஷபம். சிவன் அருளால் தான் அன்று நான் பிழைத்தேன். என்னை அன்று சிவன் தான் காப்பாற்றினார். மார்பில் இருக்கிறது காயம் அல்ல, சிவன் நந்தி ரூபத்தில் பட்டாணி எனக்கு குத்தின பச்சை” என்றார்.

அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

நாயகன் அஷோக் ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில் ஆரம்பித்து ‘காங்ஸ் ஆப் மெட்ராஸ்’, ‘மாயத்திரை’, ‘ஆர் யூ ஓகே பேபி?’, ‘பெஸ்டி’, ‘மாயப்புத்தகம்’, ‘லாரா’ உட்பட 25 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here