வெட்டு சினிமா விமர்சனம்

தெலுங்கு ‘தலா’வின் தமிழ் வெர்சன்.

‘அம்மாவின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் மகன்’ என்ற ஒன்லைனுக்கு அட்டகாசமான ஆக்சன் அதிரடி திரைக்கதை அமைத்திருக்கும் படம். அப்பாவைத் தேடி மாநிலம் விட்டு மாநிலம் போகிற அப்பாவி ஒருவனை, சூழ்நிலைகள் அடப்பாவியாக மாற்றுகிற கதைக்களத்தில் ‘வெட்டு.’

கல்யாணமாகி முதலிரவு நடந்து முடிந்த மறுநாளே கணவரைப் பிரிகிறார் அந்த பெண்மணி. காலம் கடந்தோடுகிறது. மகன் பிறந்து வளர்ந்து மீசை முளைக்கும் பருவத்துக்கு வருகிறான். அந்த காலகட்டத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாது போகிறது; கணவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன் ஆசையை மகனிடம் சொல்கிறார். அவன் அப்பாவைத் தேடி புறப்படுகிறான். அவர் வசிக்கும் உத்தரப் பிரதேசத்துக்கு போய்ச் சேர்கிறான். அங்கு அவரையும் அவரது குடும்பத்தையும் மதவாதக் கும்பலொன்று அச்சுறுத்துகிறது. அதுவரை சாதுவாக இருந்த அவன் அரிவாளை தூக்குகிறான். அதன்பின் நடப்பதெல்லாம் மனதை உலுக்கும் சம்பவங்கள்; அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எபிசோடுகள்…

அப்பாவை அம்மாவுடன் சேர்த்துவைக்க முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

கதைநாயகன் ராகின் ராஜை பார்க்கும்போது சிறுவன், இளைஞன் என எந்த கேட்டகிரியில் அவரை சேர்ப்பது என்கிற குழப்பம் வருகிறது. முகத்தில் அப்படியொரு அமுல்பேபித்தனம். முகம் அப்படி இருந்தாலும் பெர்பாமென்ஸ் இன்று மாஸ் ஹீரோவாக இருக்கிறவர்களின் ஆரம்பகால அசத்தல்களை நினைவுபடுத்துகிறது. அப்பாவின் கறிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தபின் அவர் கோழியை வெட்டச் சொல்லும்போது பய உணர்வை வெளிப்படுத்தும் விதமாகட்டும், கோழியின் கழுத்தை அறுத்துப் போடுவதுபோல் மதவெறியர்களின் கழுத்தை வெட்டி வீசுவதாகட்டும், காதலியுடனான முத்தப் பரிமாற்றமாகட்டும், அம்மா மீதான பிரியமாகட்டும் நடிப்பில் காட்டியிருக்கும் வெரைட்டி, பியூட்டி. முழுமையான மதிப்பெண்ணை முழு மனதோடு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு குவாலிடி!

சினிமா ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒரே நாளில் கணவனை விட்டு எஸ்கேப்பாகும் சுந்தரா டிராவல்ஸ் ராதாவின் நடிப்பிலிருக்கும் வெகுளித்தனம் ரசிக்க வைக்கிறது.

கத்தி ரத்த கலவரங்களுக்கிடையில், ராகினுக்கு ஜோடியாக வருகிற அங்கிதாவின் அழகும் புன்சிரிப்பும் மனதுக்கு புத்துணர்ச்சி தருபவை.

வடமாநில மதவாதிகளின் அராஜகப் போக்கை நகலெடுத்தது போன்ற நடிப்பால் கவனம் பெறுகிறார் முக்கு அவினாஷ்.

ராகினுக்கு சித்தியாக வருகிற ரோஹித் எஸ்தருக்கு சிரிப்பு ததும்பும் முகம். கோபப்படும் காட்சிகளுக்கு அந்த முகம் ஒத்துழைக்க மறுப்பது ரசிக்க வைக்கிறது.

மகனைக் கொன்றவனை பழிவாங்க கட்டம் கட்டும் விஜி சந்திரசேகரின் கோபப் பாய்ச்சலில் வீரியம் அதிகம்.

கதையின் முக்கியமான கட்டத்தில் காட்டுவாசிகளைப் போன்ற முரட்டுத் தோற்றத்தில் எட்டிப் பார்க்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார்.

எஸ் எஸ் தமன் இசையில் உருவான ‘றெக்கை முளைக்கும் வயசு’ பாடல் மனதுக்குள் உற்சாகத்தை தூண்டிவிட, கறிக்கோழிகள் ஜாலியாக ஆட்டம்போடும் பாட்டு வித்தியாசமான விஷுவல் டிரீட்டு.

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் என கதை நடக்கும் இடங்களை அதன் சுற்றுவட்டத்தின் ஜியாக்ரபியோடு தன் கேமராவில் வளைத்துப் பிடித்திருக்கிறார் ஷ்யாம் கே நாயுடு.

ஆக்சன் காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது; வெறியாட்டம் வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் தருகிறது. வடிவமைத்திருப்பவர் ஸ்டண்ட் சில்வா.

படத்தை அதிரடி ஆக்சன் பேக்கேஜாக, மதவாத சக்திகள் அழிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இயக்கியிருக்கிற பிரபல நடன இயக்குநர் அம்மா ராஜசேகர், தன் மகனை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார் என்பது அன்டர்லைன் மெசேஜ்; அந்த மகனிடம் முன்னணி ஹீரோ ஆவதற்கான தகுதிகளும் திறமையும் இருக்கிறது என்பது விசேச செய்தி!

வெட்டு _ அடங்க மறு; அத்து மீறு!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here