நடிகர் அப்புகுட்டி, ‘இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு, கோடான கோடி நன்றிகள்‘ என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இளையராஜா இசையில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டி ‘தேசிய விருது’ பெற்றது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பொன்விழா நிகழ்வு பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நான் பெற்ற தேசிய விருதுக்கு இளையராஜா அவர்கள் மிக முக்கிய காரணம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கேரக்டர் செய்திருந்த என்னை, கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் மாற்றியவர் சுசீந்திரன் அவர்கள். அந்தப் படத்தில் ‘குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே… என்ற பாடலை இளையராஜா அவர்கள் எனக்காக இசையமைத்து, பாடிய அந்தப் பாடலை, படத்தில் வாய் அசைத்து நடித்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அந்தப் படத்தின் எமோஷனலான காட்சிகளில் நான் நடிக்கும் போது, அதற்கு இளையராஜா அவர்கள் அமைத்திருந்த பின்னணி இசை டெல்லி வரை கேட்டு, ‘எனக்கு தேசிய விருதை பெற்று தந்தது.’
இளையராஜா நம் தமிழகத்தின் பொக்கிஷம். அவர் வாழும் காலத்தில் அவர் இருக்கும் திரை துறையில் நாம் பயணிப்பது பெரும் பாக்கியம். ஒவ்வொரு நடிகர்களுக்கும் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறி, அதன் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. இந்த எல்லா பெருமையும் இளையராஜாவையே சாரும்.
கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தாலும், அரசு விழா எடுப்பது என்பது மிகப் பெரிய பெருமையாகும். இளையராஜாவிற்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

