ஜென்டில்வுமன் சினிமா விமர்சனம்

லிஜோமோல் ஜோஸ் நடிக்கிற படம் என்றாலே அது தனித்துவமானதாகத்தான் இருக்கும் என்றாகிவிட்டது. அதே தனித்துவத்துடன் இன்னொரு படம்.

பூரணிக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிறது. கணவன் எது சொன்னாலும் சரி சரி என தலையாட்டிக் கொண்டு, ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசாமல் அடக்க ஒடுக்கமான மனைவியாக குடும்பம் நடத்துகிறாள். பூரணியின் கணவன் அரவிந்த், பூரணி மீது கொள்ளைப் பிரியமாக இருக்கிறான். இப்படியாக அவர்களின் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக நகர்ந்து கொண்டிருக்கும்போது அவர்கள் வீட்டுக்கு, பூரணிக்கு பழக்கமான ஒரு பெண் வருகிறாள்.

அரவிந்த் அந்த பெண்ணுடன் தனியாக பேசுகிற சந்தர்ப்பத்தை உருவாக்குகிறான். அந்த விவரம் பூரணிக்கு தெரியவருகிறது.

இது ஒருபக்கமிருக்க இன்னொரு பெண் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருந்த அரவிந்தை சில நாட்களாக காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறாள்.

இப்படி எக்குத் தப்பாக ஏதேதோ நடக்க, அரவிந்துக்கு என்ன நடந்தது என்பதை ஆடியன்ஸுக்கு காண்பித்துவிட்டு, அரவிந்துக்கு என்ன நடந்தது என்பதை போலீஸ் கண்டுபிடிக்க முடியாமல் திணறும்படி திரைக்கதையை அமைத்து படத்துக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்.

பூரணியாக லிஜோமோல். மனுஷி எந்த காட்சிக்கு எந்தளவிலான உணர்வு தேவையோ அதற்கு துளிகூட கூடாமல் குறையாமல் பங்களிப்பு தருகிற நடிப்பு ராட்சசி. கணவனின் சொல்லுக்கு அப்படியே கட்டுப்படுவது, வார்த்தைகளுக்கு வலிக்காமல் இதமாகப் பேசுவது, கணவனுடன் தொடர்பிலிருக்கிற பெண்ணை சந்திக்கும்போது என் புருசன்தான் உனக்கு கிடைச்சானா?’ என்பதுபோல் சுடுசொல் வீசுகிற அளவுக்கு மனதில் எழுந்து நிற்கும் கோபத்தை நக்கலடிப்பதுபோல் வெளிப்படுத்துவது, யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் இயல்பாக மற்ற வேலைகளில் ஈடுபடுவது, போலீஸ் விசாரணையை பதட்டம் ஏதுமின்றி எதிர்கொள்வது என ஒவ்வொரு ஃபிரேமையும் நடிப்பாளுமையால் நிறைத்திருக்கிறார்.

தன்னை வருடக்கணக்கில் காதலித்து உடலாலும் கலந்தவன் இன்னொரு பெண்ணுக்கு கணவனான பின்னும் அவனுடன் தொடர்பிலிருப்பது, அவன் காணாமல் போனபின் தவிப்பது, தான் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருப்பதற்கான காரணத்தை அவனுடைய மனைவியிடம் சொல்லி கலங்குவது என பிக்பாஸ் லாஸ்லியா தனக்கு கொடுக்கப்பட்ட கனமான பாத்திரத்தை கவரும்படி செய்திருக்கிறார்.

காம உணர்வை மனதுக்கு யாரையெல்லாம் பிடிக்கிறதோ அவர்களிடம் தீர்த்துக்கொள்ள நினைக்கிற, அதற்கான முயற்சிகளில் இறங்குகிற, தான் செய்வது தப்பு என்ற குற்றவுணர்ச்சி ஏதுமில்லாத கதாபாத்திரத்தை ஏற்று அதற்கேற்ற பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் அரவிந்தாக வருகிற ஹரி.

காவல்துறை அதிகாரிகள் மோசமானவர்கள் என காண்பிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்ட கதைக்கேற்ப களமாடியிருக்கிறார்கள் அந்த வேடத்தை சுமந்திருப்பவர்கள்.

பாடலாசிரியர் யுகபாரதியின் வசனங்கள் பெண்களின் மன உணர்வுகளை தூக்கிப் பிடிக்கின்றன.

கோவிந்த் வசந்தா வயலினை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை தெரிவிக்கிறது பின்னணி இசை.

ஒருசில அறைகளுக்குள்ளேயே கதையின் பெரும்பாலான சம்பவங்கள் நடந்து முடிய, கதவின் சாவித்துவாரம் உட்பட எங்கெல்லாமோ கேமராவின் பார்வையை பரவவிட்டு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் காத்தவராயன்.

பெண்கள் தங்களுக்கெதிரான கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் ஒரு காலம்; இனியும் அப்படியே இருந்துவிடலாம் என நினைத்து விடாதீர்கள்; பெண்ணுக்கு வரும் கோபம் பொல்லாதது என ஆண் சமூகத்தை எச்சரித்திருக்கிற ஜென்டில்வுமனை ‘குக்கர்’போல் விசிலடித்துப் பாராட்டலாம்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here