இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களில் விஜய் ஆண்டனி நடித்து, பாலாஜி குமார் இயக்கியுள்ள ‘கொலை’ படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி பகிர்ந்த அனுபவம் இது.
தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர் மிஸ்டரி த்ரில்லர்களின் ரசிகன். அது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் வலுவாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். மட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் உருவாகும் என்று நம்புகிறேன்” என்றார்.