ஆகாஷ் முரளி நடித்துள்ள முதல் திரைப்படம் ‘நேசிப்பாயா.’
விஷ்ணு வர்தன் இயக்கியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார்.
இந்த நிலையில் படம் பற்றி பேசிய ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷுவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்.
படத்தின் டிரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. படத்தின் கதை எளிமையானது. ஆனால், அதன் உணர்வுகள் மிகவும் ஆழமானது. ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ படத்தின் கதை.
பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்த இயக்குநர் விஷ்ணுவர்தன் சாருடன் பணிபுரிந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. அதிதியும் எனக்கு பெஸ்ட் கோ-ஸ்டார். நடிப்பில் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். கல்கி கோச்லினும் சிறப்பாக நடித்துள்ளார். எனது முதல் படத்திலேயே நடிகர்கள் பிரபு சார், சரத்குமார் சார், குஷ்பு மேடம் என சிறுவயதில் யாருடைய படங்களை நான் பார்த்து வளர்ந்தேனோ அவர்களுடன் நடித்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.