கிஷன், மோனிகா நடிக்க, விகாஸ் ஆனந்த் இயக்கிய படைப்பு ’சிங்க்.’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நடிகர் கிஷன், “என்னுடைய முதல் படமான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ’சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான். படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், ’ஓடிடியில் தான் ரிலீஸ் செய்ய உள்ளோம், பார்த்து விட்டு சொல்லுங்கள்’ என்று ட்வீட் ஒன்று போட்டேன். பெரியளவில் ஆதரவு கிடைத்தது” என்றார்.
இயக்குநர் விகாஸ் ஆனந்த், “நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது. குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம். எங்களது திறமைக்கு ஆதரவு கொடுத்துள்ள ஆஹாவுக்கு எங்களது நன்றி” என்றார்.
நடிகை மோனிகா, “‘சிங்க்’ மிகவும் ஆர்வமூட்டும் திரைக்கதையோடு பயணிக்கும் படமாக இருக்கும். பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.
ஒளிப்பதிவாளர் சிவராம், இசையமைப்பாளர் அபுஜித், நடிகர் நவீன் ஜார்ஜ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.