சிலம்பரசன் டி.ஆர். நடித்து, ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ரசிகர்களின் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடந்தது.
படக்குழுவினர், திரைப்பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் சிலம்பரசன் டி.ஆர்., ”எனக்கு இந்த மாதிரி பிரமாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரமாண்டத்தை பார்த்ததும் நம் விழா தானா என சந்தேகம் வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது விண்ணை தாண்டி வருவாயா விழாவிற்கு வந்திருந்தார். அந்தப்படம் போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.
தயாரிப்பாளர் என்னை மகனைப் போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை அமெரிக்க டிரிப் கூட்டிபோனதிற்கு முழு காரணம் அவர் தான். கௌதம் வாசுதேவ் மேனனுடன் இது மூன்றாவது படம். நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப்படத்திலும் அது இருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்கள் தான் தருவார். சித்தி இந்தப்படத்தில் அறிமுகமாகிறார் நன்றாக நடித்துள்ளார். முதலில் காதல் கதை செய்வதாகத்தான் இருந்தது. இந்தப்படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம் என்றேன். அப்போது தான் ஜெயமோகன் கதை வந்தது.
இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக்கூடாது ரசிகர்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
படத்தின் இயக்குநர் கௌதம் மேனன், நதிகளில் நீராடும் சூரியன் என தான் முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார். அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார். நான் சிம்பு புது ஹீரோ போல் உழைப்பார் என்று ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக்கதைக்கு 3 பாடல்கள் தந்திருந்தார். பின் இந்த கதையை சொன்ன போது புதிய பாடல்கள் தந்தார். இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் தான் படம். எனக்கு இந்தப்படம் ஒரு புது விசயமாக இருந்தது.
ஜெயமோகன், ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளிவந்து ஜெயித்தால் தான் இயக்குநர், இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்றார். ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். இதில் அவர் கதை தந்த போது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப்போவது போல் ஒரு காதலை வைத்துள்ளேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ”கௌதம் இசைக்காதலன் அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துகொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன். தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால் தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவும் பிடிக்கும். அவருக்காகவும் தான் இந்த படத்தில் வேலை செய்தேன். பாடல்களும் படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.
நடிகை ராதிகா, ”இன்று இங்கு ரெண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ஆர்., சிம்பு. சிம்புவை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். அவரை திறமையை வைத்து கொண்டு வீணாக்காதே என்பேன். இந்தப்படத்தில் மிரட்டியிருக்கிறார். ஆடியன்ஸ்க்கு நிறைய சர்ப்ரைஸ் இந்தபடத்தில் இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ”கமல்ஹாசன் சார் என் கலை குருவாக இருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தம்பி சிம்பு இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வெளிவருபவை நல்ல படங்களாக இருக்கும். இந்தப்படத்தை கௌதம் நன்றாக எடுத்துள்ளார். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.
இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி வெளியிடுகிறார். அது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது” என்றார்.
சிறப்பு விருந்தினர் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், ‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகப்பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்பது. அது போல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே.
சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை” என்றார்.
விழாவில் படத்தின் நாயகி சித்தி, நடிகர்கள் நாசர், ஜீவா, ஆர்.ஜே. பாலாஜி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொழில்நுட்பக் குழு:-
ஒளிப்பதிவு – சித்தார்த்தா நுனி
எடிட்டிங் – ஆண்டனி
பாடல் வரிகள் – தாமரை
நடனம் – பிருந்தா
ஸ்டைலிங் & காஸ்ட்யூம்ஸ் – உத்தாரா மேனன்
சண்டைப் பயிற்சி – லீ விட்டேக்கர்-யானிக் பென்
நிர்வாகத் தயாரிப்பு – அஷ்வின் குமார்
வண்ணக்கலைஞர் – ஜி. பாலாஜி
ஒலி வடிவமைப்பு – சுரேன் ஜி, அழகியகூத்தன்
ஒலி கலவை – சுரேன் ஜி
உரையாடல் ரெக்கார்டிஸ்ட் – ஹபீஸ்