வேலம்மாள் நெக்சஸ் கல்வி நிறுவனம், மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகளில் சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்தியது.
இந்த கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் எம். வீ. எம். வேல்மோகன், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர்ஆர். காளீஷ்வரன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய பகுதியாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களான தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறை இசை, ஒயிலாட்டம் போன்ற பல கலை நிகழ்வுகள் பார்வையாளர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தது. வண்ணமயமான ஆடைகளால், இனிமையான இசையால், அற்புதமான நடன அசைவுகளால் உயிர்ப்பூண்டன.
இந்த விழா, நாட்டுப்புறக் கலைகளின் அழகையும் அரிய பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறவும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.
திறமையான கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும் முக்கிய தளமாகவும் இக்கலைவிழா செயல்பட்டது.
விழாவின் ஓர் அங்கமாகத் தங்கள் திரைப்படங்கள் வழியாக மக்களிடம்
தமிழகப் பாராம்பரியக் கலைகள் பற்றிய விழிப்புணர்வைச் சிறப்பாகக் காட்சிப் படுத்திய திரை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுபெற்ற இயக்குநர்கள்:-
வெற்றிமாறன் – விடுதலை பாகம் 2
மாரி செல்வராஜ் – வாழை
பா. ரஞ்சித் – தங்கலான்
சீனு ராமசாமி – கோழிப்பண்ணை செல்லத்துரை
பிரேம்குமார் – மெய்யழகன்
பி. எஸ். வினோத் ராஜ் – கொட்டுக்காளி
டி. ஜே. ஞானவேல் – வேட்டையன்
தமிழரசன் பச்சமுத்து – லப்பர் பந்து
போஸ் வெங்கட் – சார்
பாரி இளவழகன் – ஜமா
திவ்யாபாரதி – ஜில்லு
மைக்கேல் கே. ராஜா – போகுமிடம் வெகு தூரமில்லை
எழில் பெரியவேடு – பராரி
நந்தா பெரியசாமி – திரு.மாணிக்கம்
இரா. சரவணன் – நந்தன்
விழா அமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த விழா கலைகளின் வெற்றித் திருவிழாவாக அரங்கேறி நிறைவடைந்தது.